தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எத்தனை பேர் வருவீர்கள் ?
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சண்முகசுந்தரம், சs_shanmugasundar@yahoo.com
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 40.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 142
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • எத்தனை பேர் வருவீர்கள் ?
  • போர்க்கலை
  • கடவுள் பிறந்த கதை
  • இதோ ஒரு புதிய பொருளாதாரம்
  • இந்திய ஏழ்மை
  • திராவிடம்- ஆரியம் அடிப்படை சித்தாந்தங்கள்
  • எங்கே போகிறோம் ?
  • நிறுவனங்களில் மாற்றம் வேண்டும் 
  • வாழ்க்கைப் போராட்டம்
  • மண்பாசம்
  • காதல் கலாச்சாரம்
  • ஒப்புரவு
  • குங்குமமும் திருநீறும்

ஆகிய 13 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இவற்றில் இருந்து ஒரு கட்டுரை கீழே தரப்படுகிறது

போர்க்கலை

போரும் போராட்டமும் உயிரினங்களிடத்தே இயற்கை அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக் கலைகளாகும்.; இக்கலைகளின் வெவ்வேறு அம்சங்களை உயிரினங்களின் வாழ்க்கைக்கு நிலைக்கு ஏற்றவாறு இயற்கை நிர்ணயித்திருக்கிறது. போர்க் கலைகளில் கடைபிக்கப்படும் வெவ்வேறு அம்சங்களைப் பொறுத்து உயிரினங்களின் வாழ்வும் தாழ்வும் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகின்றன. போர் என்றும் போராட்டம் என்றும் நாம் சொல்வதில் வன்முறை சார்நத செயல்பாடுகள் மட்டுமின்றி கொள்கைகள் சார்ந்த செயல்பாடுகளையும் சேர்த்தே நாம் பேசுகிறோம். போர்க் கலையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றிய ஒரு அறிமுகமே இக்கட்டுரை.

நேரடித் தாக்குதல்

ஒரு சமயம் நான் ஆனைமலைக் காட்டுப் பகுதியில் பயணம் செய்ய நேர்ந்தது. அப்போது சில நாட்களுக்கு முன்பாக சிறுத்தை ஒன்றும் காட்டுப்பன்றி ஒன்றும் போரிட்ட ஒரு சம்பவத்தை அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் ஒரு விசேஷமான செய்தியாக என்னிடம் கூறினார்கள். அந்தப் போர் இரவு பகலாக சிறிது நேரம் கூட இடைவெளி இல்லாமல் இரண்டு நாட்கள் நடைபெற்றனவாம். அவை நடத்திய போரில் எழுந்த உறுமல் சத்தம் அச்சமூட்டும் வகையில் அந்த மலைப் பிரதேசத்தில் எங்கும் எதிரொலித்தனவாம். அந்தச் சத்தததைக் கேட்டு மான்கள் யானைகள் காட்டுப் பசுக்கள் கரடிகள் ஆகிய எல்லா விலங்குகளும் ஒருவித அச்சத்தோடு அந்த இரண்டு நாட்களும் நடமாடிக் கொண்டிருந்தனவாம்.

            மூன்றாவது நாள் காலையில் அந்த இரு போராளிகளின் சத்தம் சுத்தமாக நின்றிருந்தது. துணிச்சல் மிகுந்த மலைமக்களில் சிலர் போர் நடந்த இடத்தைக் குறிவைத்து அங்கே சென்று பார்த்தனராம். அங்கே சிறுத்தை ஒன்று தன்னால் கொல்லப்பட்ட ஒரு காட்டுப் பன்றியை தின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கின்றனர். இரண்டு நாள் போராட்டத்தையும் சத்தத்தின் மூலமாகக் கவனித்து வந்த அந்தப் பகுதி மக்கள் கடைசியில் காட்டுப் பன்றி கொல்லப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டனர். பச்சாதாபப்பட்டனர். காட்டுப் பன்றி நடத்திய வீரத்தை மெச்சி அதைப் பாராட்டவும் செய்தனர்.

            இந்தச் சம்பவத்தைக் கேட்ட பிறகு இயற்கை தன் நியதி ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அந்த நியதி ‘தாக்குதல் போரை நடத்துபவர் தற்காப்புப் போரை நடத்துபவரை இறுதியில் வென்று விடுவார’; என்பதாகும். இந்த நியதி ஒரு போதும் பிழையாவதில்லை. இயற்கை வகுத்திருக்கும் உயிரினங்களின் வாழ்க்கை அமைப்பில் ஒரு உயிர் மற்றொரு உயிரைக் கொல்வதற்கு (வெல்வதற்கு) இந்த நியதியே வழி செய்து கொடுக்கிறது.

            சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கும், வல்லூறு, பருந்து, ஆந்தை போன்ற பறவைகளுக்கும் தாக்குதல் போர்க் கலையைக் இயற்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் இவைகளுக்கு இரையாகும் விலங்குகளுக்கு தற்காப்புப் போர்க் கலையை மட்டுமே கற்றுக் கொடுத்திருக்கிறது. எனவே தற்காப்புப் போர்க் கiலையைப் பின்பற்றுகிற விலங்கு அது எப்பேர்ப்பட்ட ஆவேசத்தோடு போர் செய்தாலும் எதிர்த்துப் போரிடும் விலங்கிடம் தோற்றுப் போய் இரையாகிறது.

            இதிலிருந்து எதிர்ப்புப் போர்க் கலையைப் பின்பற்றுபவர்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பதையும தற்காப்புப் போர்க் கலையைப் பின்பற்றுபவர்கள் இறுதியில் தோல்வியடைவார்கள் எனனும் இயற்கையின் மாறாத நியதியை முன்னிட்டே ‘offence is the best defence’ என்கிறது ஆங்கிலப் பழமொழி ஒன்று.

            இரண்டாவது உலகப் போரின் போது இட்லர், தான் போர் தொடுத்த இடங்களில் எல்லாம் வென்று கொண்டே வருகிறான். அவனை எதிர்ப்பதற்காக தற்காப்புப் போரைப் பின்பற்றியவரை நேச நாடுகள் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டன. பிறகு அந்த நேச நாடுகள் தமது போர்க் கலையை எதிர்ப்புப் போராகத் பல போர் முகங்களில் மாற்றிக் கொண்டதும ;இட்லர் தற்காப்பு முறையைப் பின்பற்ற வேண்டியதாயிற்று முடிவில் இட்லர் தோற்கடிக்கப்பட்டான்.

            இப்போதும் கூட உலகின் பல நாடுகளில் விடுதலைப் போர்கள் பல வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. போராளிகள் எதிர்ப்புப் போர் தொடுப்பதையும் சம்பந்தப்பட்ட அரசுகள் தடுப்பு நடவடிக்கை எடுப்பதையும் பார்க்கிறோம். இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் இறுதியில் போராளிகள் வெற்றி பெறுவது நிச்சயம். போராளிகளை ஒடுக்க வேண்டுமென்றால் அரசு எதிர்ப்புப் போரைத் தொடங்கி போராளிகளைத் தற்காப்புப் போருக்குள் தள்ள வேண்டும்.

            இந்தப் போர்க்கலை நியதி, ஒரு கொள்கையை நுழைப்பதிலும் அதை எதிர்ப்பதிலும் கூடச் சரியாகவே செயல்படும். உதாரணமாக ஒருசார் மக்கள் மீது ஒரு கொள்கை நுழைக்கப் படுவதாக வைத்துக் கொள்வோம். கட்டாயமாகத் திணிக்கப்படுவதாகவும் வைத்துக் கொள்வோம்.  இந்தத் திணிப்பை விரும்பாத மக்கள் தம் தலைவரின் அறிவுரைப்படி ஊர்வலங்கள் எதிர்ப்புக் கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனபதில் ஈடுபடலாம். அப்போது இந்தத் தடுப்பு முறையைப் பார்த்து சிறிது காலத்திற்கு அந்தக் கொள்கை பதுங்கும். ஆரவாரம் அடங்கியதும் மறுபடியும் அந்தக் கொள்கை வெகு ஆவேசத்துடன் நுழையப் பார்க்கும். இந்த எதிர்ப்பும் தடுப்பும் எத்தனை முறை நடைபெற்றாலும் முடிவில் மக்கள் அந்தக் கொள்கையை எதிர்ப்பதில் தோற்று விடுவார்கள். திணிக்கப்படும் கொள்கை இறுதியில் வெற்றிகரமாக நுழைந்துவிடும் மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.

            இப்படிப்பட்ட தடுப்பு முறைகளை பின்பற்றும் எவரும் வெற்றிபெற முடியாது. மாறாக தம்மீது நுழைக்கப்படும் கொள்கையை வெல்வதற்கு உள்ள ஒரே வழி பதியதொரு தமக்கு நன்மை தரும் கொள்கையை தமது எதிராளியின் மீது நுழைக்க வேண்டும் முடிந்தால் திணிக்க வேண்டும். அதன் மூலம் எதிராளியைத் தடுப்பு முறைக்குள் தள்ள வேண்டும். அதுவே வெற்றிக்கான வழி.

எதிராளியை வெறுத்தல்

போர்க் கலையின் இன்னுமொரு அம்சம் எதிராளிகளை அடையாளங் காண்பதும் அடையாளங் காணப்பட்ட எதிராளிகளை வெறுக்கும் மனதை வளர்த்துக் கொள்வதும் ஆகும். எதிராளிகளை வெறுப்பதை விடுத்து அவர்கள்பால் காட்டப்படும் கண்ணோட்டம் அனுதாபம் பரிவு பச்சாதாபம் யாவுமே போர்க் கலையில் வெற்றிக்கு எதிரான காரியங்கள்.

கண்ணன் எடுத்துரைத்த கீதையில் பேசப்படுவது எதிராளியை வெறுக்கக் கற்றுக்கொள் என்பதே. 

நம்மில் பலபேர் பகவத் கீதையைப் படித்திருக்கலாம். ஆனால் எத்தனை பேர் அதன் மறைவான நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள்? கீதையின் நோக்கம் பற்றி விரிவாக அறிய கீதைத்தத்துவம் என்னும் கட்டுரையில் காண்க. 

போர்க்களத் தேர்வு   

போர்க்கலையின் மற்றுமொரு அம்சம் போரை நடத்துவதற்கான களமாகும். வெற்றியும் தோல்வியும் போர் நடத்தப்படும் களத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எதை எந்த களத்தில் நடாத்தினால் தமக்கு சாதகமாகவும் எதிராளிக்கு பாதகமாகவும் அமையுமோ அப்படி வைத்து நடத்தும் போராட்ட விதிகள் நேர்மைக்குப் புறம்பானவை. ஆனால் இன்றைய சமுதாய பொருளாதார மற்றும் அரசியல் அரங்கங்களில் நடத்தப் பெறுகின்ற போட்டிகளும் அவற்றின் விதிகளும் ஒரு சாராரின் வெற்றிக்காகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. போட்டிக்கான விதிகளை நிர்ணயிப்பவர்களாக அந்த ஒரு சாராராவே இருப்பதைப் பார்க்கும்போது தமிழர்களையும் தமிழர் தலைவர்களையும் நினைத்து பரிதாபப்படுகிறோம். களம் என நாம் குறிப்பிடுவதில் இடம் மட்டுமல்ல காலமும், கருவியும் உள்ளடக்கம்.

இதைப் பற்றிய விரிவான விளக்கத்தை 'முதலையைத் தரைக்குக் கூப்பிடுவோம்' என்ற கட்டுரையில் காண்க.  

போர்க்களப் பற்று

போர்க்கiயின் இன்னுமொரு அடிப்படையான அம்சம் வெற்றியும் தோல்வியும் நிலையானதல்ல அவை எதிராளிகளுக்கிடையே மாறி மாறி உறவு கொள்ளும் தகைமையுடையவை என்ற உண்மை. எனவே வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களின் அடுத்த தாக்குதல் எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். அத்துடன் அடுத்து வரும் தாக்குதலை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகைளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். எதிராளியின் போர் நேருக்கு நேராக வரும் வரை காத்திருக்காமல் எதிராளியின் போர் ஆயத்தக் குறிகள் தெரிந்த உடனேயே ஒரு ஆவேசப் போரை நடத்தி எதிராளியையும் அவர்களது முனைப்புகளையும் தகர்த்துவிட வேண்டும். இது போன்ற போர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு போரில் ஈடுபட்டிருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் போர்க்களத்தை விடுத்து வெளியேறுவதோ அல்லது போர்க்களத்தில் இருந்தபடியே ஓய்ந்திருப்பதோ கூடாத காரியமாகும்.

போரின் மீது பற்று இல்லாமல் இருப்பவர்களுக்குத் தான் போர்க்களத்தை விட்டு விரைவில் வெளியேறும் மன உந்துதல் இருக்கும். தமிழர்கள் அது போன்ற மனம் கொண்டவர்கள். எனவே தமிழர்கள் போருக்கு அருகதையற்றவர்கள். தமிழர்களை நம்பி போர் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவது தற்கொலைக்குச் சமம். அதிலும் போர்க்கலையின் முக்கிய அம்சங்களை அறியாதவர்களும் போர்ப்பற்று அற்றவர்களும் போருக்குத் தலைமை ஏற்பவர்களாக அமைந்துவிட்டால் தோல்வியும் தாழ்வும்தான் விதி. அதுவே இயற்கையின் நியதி.

நமது தலைவர்கள் சிந்திப்பார்களா? 

 

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan